{"Header": ["\nமோடியும் இம்ரானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிடத் தயார்: ட்ரம்ப்"], "Time": ["\n02 Aug, 2019\t", "| 5:23 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/02/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/", "Content": "இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிடத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அவர் அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி தன்னை கேட்டுக்கொண்டதாகக் கூறினார். எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அதிபர் ட்ரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று (01) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது, காஷ்மீர் பிரச்சினை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்தது. இதில் மத்தியஸ்தம் செய்வதை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது. மோடியும், இம்ரான் கானும் மிகச் சிறந்த தலைவர்கள். இரு நாட்டுத் தலைவர்களும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறேன் என ட்ரம்ப் தெரிவித்தார்."}